மதுபானங்களை திருடிச்செல்லும் ரவுடிகளின் சிசிடிவி காட்சிகள் வைரல்

 

புதுச்சேரி, மே 19: புதுச்சேரியில் மதுபான கடையில் இலவச மதுபானம் கேட்டு ஊழியரை தாக்கி மதுபான பாட்டில்களை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் மதுபான கடை ஒன்றில் கடந்த 14ம் தேதி அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான ஆறுமுகம், சுகன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் லோடு கேரியர் வாகனத்தில் வந்து தங்களுக்கு இலவசமாக மதுபானம் வேண்டுமென மேலாளர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளனர். அவர் மதுபான கடை உரிமையாளரிடம் பேசிவிட்டு ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை இலவசமாக அறுமுகத்துக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு அது போதது, இன்னும் மதுபானங்கள் வேண்டும் என கேட்டு ஊழியர் அருள்ராஜிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து மதுபான கடைக்குள் சென்ற அவர்கள், மேலாளர் சிவகுமார் மற்றும் அங்கிருந்த ஊழியர்களை தாக்கி கூடுதலாக மதுபான பாட்டில்களை அட்டை பெட்டியில் எடுத்து கொண்டு தாங்கள் வந்த வாகனத்தில் வைத்து எடுத்து சென்றனர். இது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த காட்சிகளுடன் மதுபான கடை மேலாளர் சிவகுமார் பாகூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடிகளான ஆறுமுகம் சுகன் மற்றும் அவர்களின் கூட்டாளிகளான சங்கர், முருகன் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை