மண்டல அறிவியல் போட்டியில் சிறப்பிடம் பனையூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

குளத்தூர், நவ.15:மண்டல அளவிலான அறிவியல் போட்டியில் சிறப்பிடம் பிடித்த பனையூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அளவில் 2023ம் ஆண்டிற்கான 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, வல்லநாட்டில் நடைபெற்றது. பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 46 மாணவர்கள் சுமார்23 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆசிரியர் அற்புத சகாயராஜா பயிற்சியின் கீழ் மாணவிகள் கீர்த்திகா, திருமணிச்செல்வி ஆகியோர் மண் புழு உரம் தயாரித்தல் என்ற தலைப்பிலும், தலைமை ஆசிரியை மரியஅனிதா பயிற்சியின் கீழ் மாணவிகள் தேவஅனுஷியா, அனிதா ஆகியோர் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து மண்டல அளவிலான மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் தென்மண்டல அளவில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்த மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளி செயலர் ஆதிமாரீஸ்வரன், தலைமை ஆசிரியர் மரிய அனிதா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் பாராட்டினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை