மோகனூர், ஆக.6: அரசு மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சார்பில், வரும் 9ம் தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 55 ஆயிரம் மணல் லாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளும் இயக்கி வந்தன. இந்நிலையில், ஆற்றில் அளவிற்கு அதிகமாக மணல் அள்ளுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் எழுந்த புகாரின்பேரில், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு அரசு மணல் குவாரிகளை மூடினர்.
இதனால், மணல் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரிகளை திறந்து அரசே நேரிடையாக மணல் வழங்க வேண்டுமென மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். வரும் 9ம் தேதி திருச்சி திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார்.