சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வைகை, காவிரி உள்ளிட்ட மிகப்பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களும், நாட்டாறு, சருகணியாறு மற்றும் கண்மாய்களில் ஆழ்குழாய் அமைத்து அதன் மூலமும் ஏராளமான ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திருச்சி அருகே முத்தரசநல்லூர் பகுதியில் இருந்து பல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மற்ற திட்டங்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டத்திற்குள் உள்ள பகுதிகளில் தொடங்கப்பட்ட திட்டங்களாகும். வைகையாற்றில் உள்ள குடிநீர் திட்டம் சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120 குடிநீர் திட்டங்கள் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஆற்றில் இருந்த நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் மணல் அள்ளப்பட்டதால் குறைந்து விட்டது. சுமார் 15அடி ஆழம் வரையில் மணல் அள்ளப்பட்டு நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆற்றுக்குள் சுமார் 350 அடி ஆழத்திற்கும் அதிகமாக போர் போட்டால்தான் நீர் கிடைக்கிறது. சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்கென ஆண்டுதோறும் வைகையில் நீர் திறப்பது கிடையாது. வைகை பகுதியில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு பல மாவட்டங்களுக்கு நீர் எடுக்கப்படும் நிலையில் இம்மாவட்டத்திற்கென குடிநீருக்கான பங்கு நீர் திறக்கப்படாததால் அதிகப்படியான நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையால் ஏற்பட்ட பாதிப்பு, தொடர் வறட்சி உள்ளிட்டவற்றால் புதிய குடி நீர் திட்டங்கள் எதுவும் தொடங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் எடுக்கப்படும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இதுபோல் நாட்டாறு, சருகணியாறு மற்றும் கண்மாய் பகுதிகளில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. தொடர்ந்து மழை இல்லாமலும், அதிகமான வெப்பம் நிலவுவதாலும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த குடிநீர் திட்டங்கள் மூலம் பெறப்படும் நீரின் அளவு குறைந்து வருகிறது. மணல் திருட்டை தடுக்காவிட்டால் தற்போது நீர் கிடைத்து வரும் குடிநீர் திட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது….