மணப்பாறை, ஏப்.21: மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை செயல்விளக்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிப்காட் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபரிந்து வருகின்றனர். இந்நிலையில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு மணப்பாறை தீயணைப்பு துறையினர் மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சிப்காட் தொழில் கூட பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தீயினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்றும் மற்றவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்த்தி காண்பித்தனர். மேலும் சிப்காட் தொழிலாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் தீ பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினர்.