சாயல்குடி, செப்.11: மட்டியரேந்தலில் அன்னை மரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது. முதுகுளத்தூர் அருகே மட்டியரேந்தலில் புனித சூசையப்பர் தேவாலயத்தில் ஆரோக்கிய அன்னை மரியாள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பங்குதந்தை குருஸ் ஜோக் முன்னிலையில் சிறப்பு மறையுரை நடந்தது. இரவில் ஆரோக்கிய அன்னை மரியாள் தேரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மட்டியரேந்தல் கிராம வீதியில் தேர்பவனி நடந்தது. கிராம மக்கள் வரவேற்று மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். விழாவில் சுற்று வட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர்.