சேலம்: சேலம் மாநகரில் 5இடங்களில் மக்காத உலர் குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கும் பணிமும்ரமாக நடந்துவருகிறது. சேலம் மாநகரின் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தினமும் சேகரமாகும் 550 டன் குப்பையானது உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இந்த குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் 36 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, மக்காத உலர் குப்பைகளை தனித்தனியே பிரித்து எடுக்கும் வகையில் மாநகரில் 5 இடங்களில் மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மையமும் ₹85 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகரில் தினமும் 200டன் உலர் கழிவுகள் உற்பத்தியாகின்றன. உலர் கழிவுகளை கையாள்வதற்கும், பொருள் மீட்பு மையம் அமைப்பதற்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ₹4.25 கோடியில் செட்டிசாவடி திடக்கழிவு மேலாண்மை வளாகம், காக்காயன் மயானம் வளாகம், எருமாபாளையம் வளாகம், மெய்யனூர், தாதம்பட்டி ஆகிய 5 இடங்களில் மக்காத குப்பையை பிரித்து எடுக்கும் மையம் அமைக்கும் பணிமும்முரமாக நடந்துவருகிறது. இந்த மையத்தில் கழிவுகளை சேகரிக்க சிறு, சிறு அறைகள் அமைக்கப்படுகிறது. இந்த மையம் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டு கொண்டுவரப்படவுள்ளது,’’ என்றனர்.