பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் குவியும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, உடனுக்குடன் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் வழியாக செல்லும் ரோட்டோரத்தில், அண்மைக்காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு குவியலாக இருப்பது தொடர்ந்துள்ளது. அதிலும் பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு, வால்பாறை ரோடு பகுதியில் உள்ள கிராம ரோட்டோரத்தில் தற்போது ஆங்காங்கே குப்பை கழிவுகள் அதிகளவு உள்ளது.இதில் கிராமப்புற ரோட்டோரத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் தேங்கியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகம் மற்றும் வீடுகளில் இருந்து ஒரே இடத்தில் பல நாட்களாக கொட்டப்படும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை உண்டாக்குகிறது.குடியிருப்பு மற்றும் போக்குவரத்து மிகுந்த ரோட்டோரங்களில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதுடன், ரோட்டோர சாக்கடையில் கழிவுநீர் தேங்குவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த ரோட்டோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற முன்வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க, குப்பைகள் மீண்டும் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை சுகாதார பிரிவு அதிகாரிகள் எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….