குளித்தலை, ஜூலை 2: மாயனூரில் இருந்து வரும் தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் பச்சை கலரில் வந்ததால் சாயக்கழிவு கலந்திருக்கலாம் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து மாயனூர், சித்தலவாய், மகாதானபுரம், மேட்டுமகாதானபுரம், லாலாபேட்டை, திம்மாச்சிபுரம், வதியம், எல்லரசு பாலம் வழியாக குளித்தலை சுங்ககேட் கடம்பர்கோவில் பெரியபாலம், தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர், குமாரமங்கலம் வழியாக பெட்டவாய்த்தலை வரை செல்லும் தென்கரை வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசனம் பயன்பெற்று வருகிறது. மேலும் கிளை வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு இந்த தென்கரை வாய்க்கால் பாசன தண்ணீரைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பாசனத்திற்காக மாயனூர் கதவணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்பொழுது தேங்கி இருந்த சாயக் கழிவுகள் கலந்திருப்பதால் தண்ணீர் பச்சை கலரில் நுங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்து வாய்க்காலில் கலந்து பாசனத்திற்கு சென்றது. இதனைக்கண்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபோன்று பச்சை நிறத்தில் உள்ள சாயக்கழிவு தண்ணீரை விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த வாய்க்கால் பாசனத்தின்போது சுற்று வட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரில் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை வந்துவிடும். அதனால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் பச்சை நிறமாக வர காரணம் என்ன? அதனை அகற்றுவது குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.