தஞ்சாவூர், ஜூன் 26: மாதம்தோறும் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்று மக்களைத் தேடி மருத்துவ திட்ட சிஐடியூ சங்க ஊழியர்கள் நேற்று தஞ்சை சுகாதார இணை இயக்குனர் கலைவாணையிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 351 பெண் தன்னார்வலர்கள் பணி செய்து வருகிறோம். எங்களுக்கு கொடுக்கப்படும் பணியினை மிகச் சிறப்பாக செய்து பணி சான்றிதழை அனைத்து மாதங்களிலும் பத்தாம் தேதிக்குள் சமர்ப்பித்து வருகின்றோம். ஆனால் எங்களது ஊக்கத் தொகையான இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு வழங்கப்படுகிறது.
பாளையப்பட்டி, திருவோணம் இந்த இரண்டு வட்டத்திற்கு மட்டும் ஏப்ரல் மாதத்திற்கான ஊக்கத்தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. எனவே எங்களது பணியை ஊக்கப்படுத்தும் விதமாக மாத ஊதியத்தை மாத மாதம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சாய் சித்ரா தலைமை தாங்கினார். சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், மாவட்டத் துணைச் செயலாளர் அன்பு, மாவட்ட தலைவர் வள்ளி, பொருளாளர் தமிழ் இலக்கியம், நிர்வாகிகள் செல்வராணி ஆனந்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.