புதுடெல்லி: ‘மக்களுடன் அதிக தொடர்பில் இருக்க வேண்டும்,’ என்று ஆளுநர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார். மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 51வது மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். மாநாட்டில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பை உருவாக்குபவர்கள், பொதுமக்களுக்கும் மாநில அரசுக்கும் நண்பர்கள், தத்துவஞானி மற்றும் வழிகாட்டியாக ஆளுநர்கள் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தேசிய இலக்குகளை அடைவதிலும் மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஆளுநர்களின் பங்கு முக்கியமானது. மாநில மக்களின் நலன் மற்றும் அவர்களுக்கான சேவையை உறுதி செய்வதில் உறுதிபூண்டு இருக்கிறீர்கள் என்பதை ஆளுநர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதனை பூர்த்தி செய்வதற்கு மாநிலத்துக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். மக்களிடம் அதிக தொடர்பில் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் நாம் அனைவரும் தொடர்ந்து பொதுமக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று நோயை தடுப்பதில் ஆளுநர்கள் தீவிர பங்களிப்பை வழங்கியிருப்பது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்….