போளூர்: போளூர் அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கத்தியால் குத்திக்கொன்று பணம், நகைகள் கொள்ளையடித்து சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி காசியம்மாள்(85). சின்னதம்பி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் ஏரியையொட்டி உள்ளது. காசியம்மாள் நிலத்தை பார்த்துக்கொள்வதற்காக கடந்த 4 ஆண்டுகளாக அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட சமுதாயக்கூடத்தில் தங்கியுள்ளார்.நேற்று காலை சமுதாயக்கூடம் வழியாக சென்றவர்கள் காசியம்மாள் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி உட்பட ஒன்றரை சவரன் நகையையும் இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தையும் காணவில்லை. தகவலறிந்து வந்த போளூர் போலீசார், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த மூதாட்டியின் 3வது மகன் சின்னபையன், அவரது மனைவி குமாரி, மூத்த மகன் செல்வத்தின் மகன்கள் நரேஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….