போலீஸ் ஸ்டேஷனை வி.சி.க.வினர் முற்றுகை

காவேரிப்பட்டணம், ஆக.8: காவேரிப்பட்டணம் அருகே கடன் பிரச்னையில் மிரட்டியதால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவேரிப்பட்டணம் அடுத்த சவுளூரைச் சேர்ந்தவர் கார்த்திக்(27), கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன், தனது மாமாவின் டூவீலரை பூமாலை நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் அடமானம் வைத்து, ₹15 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடன் தொகையை திருப்பி கட்டாததால், விஜயகுமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள், கார்த்திக்கை திட்டி தாக்கியுள்ளனர். இதையடுத்து கார்த்திக் குடும்பத்தினர், விஜயகுமாரிடம் ₹10 ஆயிரம் கொடுத்து விட்டு, மீதம் ₹5 ஆயிரத்தை சிறிது நாளில் கட்டி விடுவதாக நேற்று முன்தினம் கூறியுள்ளனர். அதை கேட்காத விஜயகுமார் தரப்பினர், கார்த்திக் குடும்பத்தினரை திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.

இதில், மனமுடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை காவேரிப்பட்டணம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்ததை கண்டித்து, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சசிகுமார், சிவக்குமார், திராவிட ராசா மற்றும் கார்த்திக்கின் உறவினர்கள், நேற்று காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இவ்வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றிய போலீசார், பூமாலை நகரை சேர்ந்த விஜயகுமார்(29), சிவக்குமார்(33), ராமசாமி(55) ஆகிய மூவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை