கே.வி.குப்பம், அக்.7: கே.வி.குப்பம் அருகே தனியார் வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற ஆரணியை சேர்ந்த முதியவர் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த சீதாராமபேட்டையில் இயங்கி வரும் தனியார் வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு போலி தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற திருவண்ணமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த கணேசன்(64) என்பவர் மீது கே.வி.குப்பம் போலீசில் வங்கியின் மேலாளர் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பானவழக்கு காட்பாடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின்போது 3 முறை ஆஜராகாமலேயே கணேசன் இருந்துள்ளார். அதேபோல், நேற்று முன்தினம் நடைபெற்ற வாய்தாவிற்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கணேசனை ஆரணியில் வைத்து கே.வி.குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.