Sunday, October 6, 2024
Home » போரூரில் திறந்தவெளி ஒதுக்கீடாக பெறப்பட்ட 16.6 ஏக்கரில் சதுப்பு நில பூங்கா: ரூ.12.6 கோடியில் தயாராகிறது

போரூரில் திறந்தவெளி ஒதுக்கீடாக பெறப்பட்ட 16.6 ஏக்கரில் சதுப்பு நில பூங்கா: ரூ.12.6 கோடியில் தயாராகிறது

by Ranjith

 

சென்னை, ஜூலை 8: போரூரில் 16.6 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.12.6 கோடி மதிப்பீட்டில் சதுப்பு நில பூங்கா பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சென்னை பெருநகர் பகுதியில் புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, 10 சதவீத நிலம் திறந்தவெளி ஒதுக்கீடாக பெறப்படும். இவ்வாறு பெறப்படும் நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டு பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.

இதில், ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில், விளையாட்டு வளாகங்கள் அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்காக, காலி நிலங்களின் விவரங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பெறப்பட்டன. இதன்படி, போரூரில் தனியார் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், 16.63 ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தில், நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன் அடிப்படையில், ரூ.12.6 கோடி மதிப்பீட்டில் இங்கு செயற்கை முறையில் சதுப்பு நிலம் உருவாக்கப்பட்டு, மழைநீரை உறிஞ்சி சேமிக்கும் வகையிலான ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கப்படுகின்றன. சிறுவர் விளையாட்டு திடல், நடைபயிற்சிக்கான இடம், நீர் நிலைகள், செயற்கை நீரூற்றுகள், அலங்கார தாவரங்கள் என, இந்த பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

இங்கு கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்த பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘16.6 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில், நடைபாதை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் இருக்கும், மேலும் வெள்ளத்தை தணிக்கும் வகையில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், இருக்கைகள், வெளிப்புற உடற்பயிற்சி கூடம் மற்றும் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நுழைவு கேலரி ஆகியவை அடங்கும். மேலும், 85க்கும் மேற்பட்ட பூர்வீக தாவரங்கள், மரங்கள் அமைகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’’ என்றனர்.

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi