திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால், இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அன்பீர் பாஷா மகன் சதாம்(31) என்பவரது வீட்டில் போதை ஊசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், போதை ஊசி தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 7 குளுக்கோஸ் பாட்டில், 160 போதை மாத்திரை, 10 ஊசியுடன் கூடிய சிரிஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சதாமை காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். சதாம் அளித்த தகவலின் பேரில், திண்டிவனம் பங்களா தெருவை சேர்ந்த சூர்யா(22), ஷாம் (19), சிவா (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …