தர்மபுரி, ஆக. 14: தர்மபுரி மாவட்டம், திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகுமார்(43). கூலித்தொழிலாளியான இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி(37) என்பவருக்கும், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, ரேவதி கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் முத்துகுமார் மனவேதனையில் குடிக்கு அடிமையான நிலையில் உடல் நலமும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி முத்துகுமார் அங்குள்ள புளியமரத்தடியில் போதையில் மயங்கி கிடந்தார். அவரின் நெற்றியில் காயம் இருந்தது. போதையில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுபற்றி கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.