சென்னை: தமிழகத்தில் இளநிலை சிவில் நீதிபதிகள் பணிக்கு 2009ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டன. இத்தேர்வில் வெற்றி பெற்று நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் பணி மூப்பு நிர்ணயித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வாசுதேவன், செந்தில் முரளி, வி.எம்.நீஸ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பணிமூப்புக்கு இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்த சுழற்சி நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் தகுதியான இடஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் பின்னுக்கு தள்ளப்படுவர். எனவே, போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும். எதிர்காலங்களில் திருத்தியமைத்த பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒருவேளை இரு விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண்களை பெற்றிருந்தால் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர்….