திருப்பூர்: திருப்பூரில் படிக்கும் போட்டி தேர்வு பயிற்சி மைய மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள படியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் ஆனந்தி (17). இவர் திருப்பூரில் இருக்கும் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இப்பயிற்சி மையம் தனியார் கட்டிடத்தில் 3வது மாடியில் அமைந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். நேற்று மாலை 5 மணி அளவில் மாணவியின் தந்தை மணிகண்டன் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டனும், மகள் ஆனந்தியும் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மேல் மாடியில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மாணவிக்கு இடுப்பு மற்றும் தலைப்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த மாணவி தந்தை அப்பகுதியினரை உதவிக்கு அழைத்து கதறி அழுதார். தொடர்ந்து தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், மணிகண்டன் தனது மகளின் காதல் விவகாரத்தில் கண்டித்ததும், இதனால் மனமுடைந்த ஆனந்தி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. …