போடி, அக். 4: தேனி மாவட்டம், போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தூய்மையே சேவை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். இதில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பது குறித்தும், வீடுகளிலிருந்து பெறப்படும் மக்கும் குப்பைகளை நகராட்சி சார்பில் உரமாக மாற்றப்படுவது குறித்தும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து பிற தயாரிப்பு பணிகளுக்கு அனுப்புவது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு, சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.