வேலூர்: பொய்கை மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து இன்று அதிகமாக இருந்தால் விற்பனையும் அதிகளவில் நடந்தது. தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு, உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை நடைபெறும்.இந்நிலையில் கோடைக்காலம் தொடங்கியதால் தீவணம் தட்டுப்பாட்டால் கடந்த சில வாரங்களாக மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் மாடுகள் விலை குறைந்தது. கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் இன்று பொய்கை சந்தைக்கு அதிகளவிலான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘எப்போதும் கோடைக்காலத்தில் மாடுகள் விற்பனை சற்று அதிகமாக இருக்கும். காரணம் தீவணம் பற்றாக்குறைதான். இதனால் விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்துவிடுவார்கள். அதன்படி இந்த ஆண்டும் தொடக்கத்தில் 1000க்கும் அதிகமான கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. அதிகளவில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து, கால்நடைகளை வாங்கி சென்றனர். இருப்பினும் தற்போது தொடர் மழையின் காரணமாக மாடுகளுக்கு தீவண தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதனால் பலரும் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கி செல்கின்றனர். மாடுகள் வரத்து கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகமாக இருந்தது. மேலும் விற்பனையும் அமோகமாக நடந்தது‘ என்றனர்….