பல்லடம், செப்.29: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் உலக ரேபிஸ் தடுப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி பொங்கலூர் வட்டார பொது சுகாதார துறை, பொங்கலூர் அரசு கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் பொங்கலூரில் கால்நடை மருத்துவமனையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெறி நாய்கடி பற்றியும் நாய் கடி தடுப்பூசி பற்றியும் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் மருத்துவ அலுவலர்கள் நந்தகுமார், நிவேதா மற்றும் கால்நடை மருத்துவர்கள் உமாசங்கர், ஜெகநாதன் ஆகியோர் எடுத்து கூறினர்.
அதைத்தொடர்ந்து உலக ரேபிஸ் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. மேலும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி மற்றும் பூமலர்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.