பைக் விபத்தில் சென்னை வாலிபர் பலி நண்பர் படுகாயம் பர்வதமலை கோயிலுக்கு வந்தபோது

வந்தவாசி, ஜூன் 29: பர்வதமலை கோயிலுக்கு பைக்கில் வந்தபோது ஏற்பட்ட விபத்தில் சென்னையை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை, கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சூர்யா(21), பட்டதாரியான இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று சூர்யா அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சுதாகர்(22) என்பவருடன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பர்வதமலை கோயிலுக்கு பைக்கில் புறப்பட்டு வந்தார். தொடர்ந்து, வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலை கீழ்சாத்தமங்கலம் கூட்ரோடு அருகே வந்தபோது, குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க சூர்யா திடீரென பைக் பிரேக் பிடித்துள்ளார். அதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயம் அடைந்த சுதாகர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சூர்யாவின் தாய் ராணி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பொன்னூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை