பைக் ரேஸில் பங்கேற்ற வாலிபர் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் வார்டு பாய்களுக்கு 1 மாதம் உதவ வேண்டும்: கைதானவருக்கு நிபந்தனை ஜாமீன்; வித்தியாசமான உத்தரவு பிறப்பித்து அதிரடி கொடுத்த உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த 21 வயதான பிரவீன் மார்ச் 20ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்துக்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பிரவீன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி பிரவீன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அஜித்குமார் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பைக் ரேசில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுசாலையில் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுகிறார்கள். இதனால், பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே, பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுகிறார்கள். பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுகிறார்கள். இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் காலை 8 மணி முதல் 12 மணிவரை வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும். அவரது பணி குறித்து மருத்துவமனை டீனுக்கு தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு