திருவள்ளூர்: திருவள்ளூரில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் அப்பாசாமி சாலை பகுதியை சேர்ந்தவர் தேவகுமார். இவரது மனைவி சரண்யா(33). இவர் திருவள்ளூரில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி சரண்யா இருசக்கர வாகனத்தில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான உழவர் சந்தை அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் சரண்யா பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த சரண்யா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்….