பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி சஞ்சய் (எ) சுகுமார், கடந்த 2 மாதங்களுக்கு முன், பைக் ஒன்றை திருடியுள்ளார். இதுபற்றி அவரது நண்பர் புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 7வது தெருவை சேர்ந்த சூர்யா (21), போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் சஞ்சயை கைது செய்துள்ளனர். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சூர்யாவுக்கு போன் செய்த சஞ்சய், தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அதன்படி சூர்யா சென்றபோது, சஞ்சய் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து, கத்தியால் சூர்யா முகத்தில் பலமாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது முகத்தில் 40 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, சஞ்சய் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்….