மேட்டுப்பாளையம்,செப்.28: கல்லாறு கொண்டை ஊசி வளைவு அருகே அரசு பஸ்-பைக் மோதியதில் மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (43). தனியார் மருந்து கம்பெனியில் மேலாளர். இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான பைக்கில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சந்தோஷ் (32) என்பவரை ஏற்றிக்கொண்டு நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
பைக்கை பாஸ்கர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சென்ற அரசு பஸ்சும், பைக்கும் மோதின. இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாஸ்கர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.