நாகர்கோவில்: பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒழுகினசேரி வழியாக இன்று காலை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் நுழைவு பகுதியான ஒழுகினசேரி சந்திப்பில், சாலை மோசமாக கிடந்தது. அந்த பகுதியில் போடப்பட்டு இருந்த பேவர் பிளாக் கற்கள் உடைந்து சாலையின் நடுவே பெரிய பள்ளம் உருவாகி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன் விபத்துக்களும் நடந்து வந்தன. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் சுமார் 15 மீட்டர் நீளத்துக்கு உடைந்து கிடந்த பேவர் பிளாக் கற்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதனால் நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து ஆரல்வாய்மொழி, தோவாளை, லாயம் விலக்கு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், துவரங்காடு, இறச்சகுளம், புத்தேரி வழியாக நாகர்கோவில் வந்தன. இதே போல் வடசேரியில் இருந்து திருநெல்வேலி மார்க்கத்துக்கு செல்ல வேண்டிய பஸ்கள், வாகனங்கள் அனைத்தும் வடசேரி ஜங்ஷன், தலைமை தபால் நிலைய ஜங்ஷன், அவ்வை சண்முகம் சாலை வழியாக ஒழுகினசேரி ெசன்று ஆரல்வாய்மொழி திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்து மாற்றத்தால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து இன்று காலை 9.30 மணியவில் வழக்கம் போல் ஒழுகினசேரி சந்திப்பு வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. 1 வாரத்துக்கு பின், ஒழுகினசேரி சந்திப்பு வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1 வாரமாக பூட்டப்பட்டு இருந்த கடைகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே ஒழுகினசேரி சந்திப்பில் அவ்வை சண்முகம் சாலையில் இன்னும் பேவர் பிளாக் அமைக்கப்பட வேண்டும். இதற்காக அவ்வை சண்முகம் சாலையில் இருந்த ஒழுகினசேரி வரக்கூடிய போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளது. இன்று அல்லது நாளை இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்….