பேரையூர் : பேரையூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் சாப்டூரை சேர்ந்த ரவியின் தோட்டத்தில் வளர்த்து வந்த சினையில் இருந்த பசு மாடு ஒன்று மின்னல் தாக்கி இறந்து போனது. ரவி அளித்த தகவலின்பேரில் கால்நடை மருத்துவர்கள் பசுவை பிரேத பரிசோதனை செய்து, புதைத்தனர். இதேபோல் சாப்டூர் 2வது வார்டை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் சுவர் பிளந்து கொண்டது. மேலும் பலத்த மழைக்கு தாடையம்பட்டி ஊராட்சியில் பிச்னை மனைவி ராஜாத்தியின் தகர வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் இப்பகுதியில் விஜயசாந்தி, மாயக்கண்ணன், நல்லகுடும்பன், ராமர், வைரம், பேச்சியம்மாள் ஆகியோரது வீடுகளும் இடிந்து விழுந்து சேதமாகின. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பேரையூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….