பேரையூர்: பேரையூர் அருகே மங்கல்ரேவ் விலக்கு பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மங்கல்ரேவ் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டப்பட்டன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முத்துஈஸ்வரன், உதவி பொறியாளர் சிவக்குமார், சாலை ஆய்வாளர் கனகசபாபதி ஆகியோர் தலைமையிலும், பேரையூர் டிஎஸ்பி சரோஜா, இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் முன்னிலையிலும் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பில் இருந்த 13 கடைகள், 6 வீடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. சாலையை அகலப்படுத்தவும், போக்குவரத்துக்கு இடையூறை குறைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …