ஊட்டி,ஆக.2: நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைக்க, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 60 பேர் கொண்ட குழு நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளது.
இதில் 32 பேர் கொண்ட குழுவினர் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் அப்பகுதிக்கு சென்று இவர்கள் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தனர். மேலும் இவர்கள் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் இரு வாகனங்களில் கொண்டு வந்துள்ளனர்.