தமிழக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. அன்றயை தினம் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுசம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை பேரவையில் வைக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கைகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மேலும் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று காலை 10 மணிக்கு பேரவை கூடியது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஒரே நாளில் 12 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மதியம் 2.15 வரை கூட்டம் நடந்தது. இந்த பேரவை கூட்டத்தொடரின் இறுதியில் அமைச்சர் துரைமுருகன், கூட்டத் தொடரை ஒத்தி வைப்பதற்கான தீர்மானத்தை அவையில் கொண்டு வந்தார். அதன்படி தேதி குறிப்பிடாமல் இந்த கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடு்த்து, தமிழக சட்டப் பேரவையில் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்….