புதுச்சேரி, செப். 28: புதுச்சேரி அரசின் அனுமதியின்றி சாலைகள், நடைபாதைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் சட்டவிரோத விளம்பர பலகை மற்றும் பதாகைகள் அமைப்பது, திறந்தவெளி இடங்கள் (உருவச்சிதைவு தடுப்பு) சட்டம் 2000 பிரிவு 6ன் கீழ் குற்றமாகும். இதற்கு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் ஏர்போர்ட் சாலை சந்திப்பு வரை அனுமதியின்றி மற்றும் பாதுகாப்பு இல்லாமல் கட்சி கொடி வைத்த நபர் மீது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மனோகரன் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் கோரிமேடு திண்டிவனம் மெயின் ரோட்டில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது உழவர்கரை நகராட்சி அதிகாரி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.