பெரியகுளம், அக். 21: பெரியகுளம் பகுதியில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்யாத நிலையில், கண்மாய்கள் நீரின்றி வறண்டது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து பெய்த மழையால் கண்மாய்களில் நீர் நிறைந்தது.
இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் வடகிழக்கு பருவமழையின் போது கண்மாய்கள் நிறைந்து அதன் பின்பு கண்மாய் நீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடியை வழக்கமாக கொண்டுள்ள விவசாயிகள் தற்பொழுது தொடர்மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிறைந்ததால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடவு பணிகளுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு இருந்த நிலையில் தற்பொழுது நடவு பணிகளை தொடங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எனவே வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்பொழுது பெரியகுளம் பகுதியில் 3000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முதல் போக நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.