பெரம்பலூர், ஜூலை 9: ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை, திருச்சி மற்றும் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ சிறப்பு முகாமானது நிறுவனத்தலைவர் சேவைச் செம்மல் டாக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் டாக்டர் விஜய்ஆனந்த் மற்றும் அவரின் இருபது பேர் அடங்கிய மருத்துவ குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கினர்.
இம்முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது, மற்றும் குடல்புண், குடலிறக்கம், வயிறு, ஈரல், குடல், கணைய புற்றுநோய், மஞ்சள்காமாலை, ஜீரண மண்டல உபாதைகள் போன்ற பல்வேறு நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்வேறு வயதுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். நிறுவனத்தலைவர் இம்முகாமைப் பற்றிக்கூறுகையில் இம்முகாம் இங்கே ஏற்பாடு செய்வதன் நோக்கம் நமது பெரம்பலூர் பகுதியில் வயிறு சார்ந்த பிரச்சனைகளைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு எங்கள் நிறுவனங்கள் மூலம் கல்வி சேவை மட்டுமல்லாது மருத்துவ சேவைகளும் செய்ய வேண்டும் என்பது தான் என்று கூறினார். இம்முகாம் ஏற்பாட்டினைப் பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி, ஆசிரியர்கள் செல்வம், வாணி மற்றும் பலர் செய்திருந்தனர்.