பெண்ணிடம் நகையை பறித்த 2 பேரை பைக்கில் துரத்தி பிடித்த போலீசார்

 

காங்கயம், ஜூன் 17: காங்கயம் அருகே ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சாந்தி(40). இவர் நேற்று மதியம் சிவன்மலை-சாவடிப்பாளையம் சாலையில் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். சாந்தியை பின் தொடர்ந்து 2பேர் பைக்கில் வந்துள்ளனர். அரசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை 2 மர்ம நபர்கள் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து உடனடியாக காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக 2 நபர்களும் தப்பி சென்ற திசை நோக்கி பைக்கில் துரத்தி சென்றனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தாண்டாம்பாளையம் பகுதியில் 2 நபர்களையும் மடக்கி பிடித்துனர். விசாரணையில் கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த தினகரன் (27), அசோக் (23) என்பதும், இவர்கள் காங்கயம் அருகே அரசம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவரிங் செயின் பறிப்பு : காங்கயம், சாம்பவலசு பகுதியை சேர்ந்த போர்மன்னன் என்பவரின் மனைவி கலையரசி(37). இவர் நேற்று மாலை சிவன்மலையில் இருந்து காங்கயம் நோக்கி தனது ஸ்கூட்டியில் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் கலையரசியின் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை தங்க செயின் என நினைத்து பறித்து விட்டு பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து கலையரசி அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்