ஆலந்தூர்: புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 95 மாணவ, மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பெருங்குடி மண்டலக்குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். 186வது வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி தமிழாசிரியை கல்யாணி வரவேற்றார். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், ‘மாணவ செல்வங்களை நல்ல வழிக்கு கொண்டு செல்லவும், அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய வல்லுனர்களாக, தொழிலதிபர்களாக மாறவும் மாணவர்கள் நினைக்கின்ற இடத்திற்கு கொண்டு சேர்க்கின்ற பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இல்லம் தேடி கல்வித்திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் என எதிலும் தொலைநோக்கு சிந்தனையுடன் வழி நடத்துகிறார். ஆகவே மாணவர்கள் படிப்பில் மட்டும கவனம் செலுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பி மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஷர்மிளா திவாகர், ஷெர்லி ஜெய், பள்ளிக்கரணை பாபு. சமீனா செல்வம், திமுக நிர்வாகிகள், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் தமிழ்செல்வன், வழக்கறிஞர்கள் பா.கமலநாதன், குமாரசாமி, குபேரா யோகராஜன், எம்.கே.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். …