பெரம்பூர்: புளியந்தோப்பில் கத்தியை முனையில் பறித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சூர்யா (24). இவர் நேற்று முன்தினம் புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5 நபர்கள் குடிபோதையில் சூர்யாவை பலமாக தாக்கி, அவர் வைத்திருந்த 750 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சூர்யா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, புளியந்தோப்பு பிஎஸ் மூர்த்தி நகர் 8வது பிளாக் பகுதியை சேர்ந்த பாண்டியன் (எ) தங்கபாண்டியன் (24), அதே பகுதியை சேர்ந்த கோட்டை (எ) மணிகண்டன் (24), வியாசர்பாடி பர்மா நகர் பகுதியை சேர்ந்த சபரி (20), புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஹரிஷ் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட கோட்டை (எ) மணிகண்டன் என்பவர் புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 5 வழிப்பறி வழக்குகள் உட்பட 7 குற்ற வழக்குகளும், சபரி மீது 2 திருட்டு வழக்குகளும், ஹரிஷ் மீது திருட்டு வழக்கு, அடிதடி வழக்கு என 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் கருப்பா (எ) ஆபாவாணன் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்….