சென்னை: புனித ரமலான் திருநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நீங்கள் உண்மையையே பேசுங்கள், அது அழிவை தந்தாலும் முடிவில் வெற்றியையே தரும்’ ‘பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், கைதிகளை விடுவியுங்கள்’ என நபிகளார் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் கடைபிடித்து ஒழுகும், ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.அவர்களது உற்ற தோழனாக, சிறுபான்மையினரின் காவலராக, அவர்களில் ஒருவராகவே நம் நெஞ்சில் வாழும் தலைவர் கலைஞர் விளங்கினார். எண்ணற்ற நலத்திட்டங்களைக் திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார்.அந்த சாதனைகளின் பட்டியலை அணிவகுத்தாற்போல் சொல்லிட வேண்டுமென்றால், 1969-ல் மீலாதுன் நபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய ‘‘சிறுபான்மையினர் நல ஆணையம்” தொடங்கியது. ‘காயிதே மில்லத் மணிமண்டபம்’ அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்தது, அனைத்து சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாக, 2007ல் இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது என்று கலைஞருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது.அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் திமுக அரசும் சிறுபான்மை மக்களின் அரணாக தொடர்கிறது. முதல் முறையாக 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்துக்கு ஒரு மகளிர் சங்கம் என்பதை தளர்த்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்க பூங்காவாக தமிழ்நாட்டை காத்து நிற்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதர பாசமும் நிலைத்திருப்பதால் தான் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் நமது அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்….