புதுக்கோட்டை,மார்ச் 1: புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியின் 13ம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் டாக்டர். ஜோனத்தன் ஜெயபரதன், இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர். சலஜாகுமாரி ஆகியோர் தலைமையில், மௌண்ட் சீயோன் பள்ளிகளின் இணை நிறுவனர் ப்ளாரன்ஸ் ஜெயபரதன் முன்னிலையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவியலாளர் டாக்டர். தனலெட்சுமி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளில், சிறுவர் சிறுமியரின் வண்ணமயமான நடனங்களும், பயனுள்ள தகவல்கள் அடங்கிய நாடகங்களும் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. விழாவின் நிறைவாக பள்ளியின் முதல்வர் டாக்டர். சலஜாகுமாரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளியின் நிர்வாகத்தினர், பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் ஆகியோர் சிறந்த முறையில் வழிநடத்தினர். விழாவானது நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.