* தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் கைதுசத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இருந்து ரோந்து சென்றனர். அப்போது தனியார் கிரசர் அருகே முட்புதர் காட்டில் 2 பேரல்களில் 300 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (47), அவரது மகன்கள் சிவகுமார் (28), அஜித்குமார் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து அப்பகுதியில் சாராய ஊறல் போட்டு வைத்து கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.அதே கிராமத்தில் உள்ள கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் 2 பேரல்களில் போட்டு வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் சாராய ஊறல் போட்டு வைத்திருந்த கருப்புசாமி (46), சதீஸ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 650 லிட்டர் சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. தொடர்ந்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்ச முயன்ற 5 பேரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்….