கடலூர் : கடலூர் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை, கைது செய்ய எஸ்பி சக்தி கணேசன் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், கவிதா தலைமையிலான போலீசார், அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில், தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவி நாயுடு தெருவில் உள்ள, ராமர் மகன் சக்திவேல் (44) என்பவரின் மளிகை கடையில் சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான, 50 ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனைக்காக, மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் நேரு நகரை சேர்ந்த, சுப்ரமணியன் மகன் சிவசுப்பிரமணியன் என்ற மொத்த விற்பனையாளரிடமிருந்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி, தனது கடையில் வைத்து விற்பனை செய்வதாக சக்திவேல் கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தஞ்சாவூர் விரைந்து சென்று சிவசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 750 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வரும், வண்டி பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் (59) என்பவரையும், புதுக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் கண்ணன் (45) என்பவரையும் புகையிலை பொருட்கள் விற்றதாக போலீசார் கைது செய்தனர்….