பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

சென்னை, ஆக. 1: சென்னையில் இருந்து கடலூருக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் பிளேடால் இருவரையும் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திரு.வி.க நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (30). சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மாணிக்கராஜ் (38). இவர்கள் இருவரையும் சென்னை கிளாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஒரு குற்ற வழக்கு தொடர்பாக, விசாரணை செய்தபோது மற்றொரு குற்றவாளி கடலூரில் இருப்பதாக கூறினர். இதையடுத்து இருவரையும் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் கடலூருக்கு அழைத்து வந்து, கடலூர் பாரதி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே வைத்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, சரவணன், என்னை காட்டி கொடுத்துவிட்டாயே என்று மாணிக்கராஜை பிளேடால் கிழித்து விட்டு, தன்னைத்தானே கழுத்தில் பிளேடால் கிழித்துக்கொண்டார். இதனால் இருவர் உடலிலும் ரத்தம் கொட்டியது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சரவணன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சரவணன் திடீரென அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது