தொண்டி, ஜூன் 5: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரையிலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண் வளத்தை பாதிக்க செய்வதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் வெகுவாக குறைத்து வரும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மீறி பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறைந்து காணப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரிய ஜவுளி கடைகள், ஓட்டல் மற்றும் சிறிய பெட்டி கடைகள் வரையும் சாதாரணமாக பிளாஸ்டிக் பை பயன்படுத்துகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஜிப்ரி கூறியது, நீண்ட காலம் ஆனாலும் மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் புதைந்து மண் வளத்தை பாதிக்க செய்கிறது. மேலும் மண்ணின் மேற்பரப்பில் கிடப்பதால் மழை தண்னீர் பூமியின் உள்ளே புகாமல் நீராவியாகி விடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பல்வேறு இடையூறுகள் ஏற்படும் இவ்வகை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.