பிளாஸ்டிக் இல்லா வளாக நிறுவனங்கள்மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஏப்.13: பிளாஸ்டிக் இல்லா வளாகங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2022 – 23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு “மஞ்சப்பை விருதுகள்” வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ₹10 லட்சமும், 2ம் பரிசாக ₹5 லட்சமும், 3ம் பரிசாக ₹3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் நிறுவனங்களுக்கு இந்த மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை திருவள்ளூர் மாவட்ட இணையதளத்திலிருந்தும் (tiruvallur.nic.in) தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்திலிருந்தும் https://tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவனத்தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். எனவே வருகின்ற மே 1ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை