சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணை: மாநிலம் முழுவதும் செயல்படும் 1,354 விடுதிகளில் மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.விடுதி மாணவ/மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிதாக உணவுப் பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலப் பள்ளி/கல்லூரி விடுதி மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளுக்கான பட்டியல் மாற்றியமைக்கப்படும். தோசைக்கல் மற்றும் இடியாப்பம் அச்சு இயந்திரம் ஆகியவை விடுதிகளுக்கு வழங்கப்படும். வாரம் ஒருநாள், முதல் மற்றும் 3வது வாரம் ஆட்டு இறைச்சி 80 கிராம், 2 மற்றும் 4வது வாரம் கோழி இறைச்சி, 100 கிராம் வீதமும் கணக்கிட்டு வழங்கப்படுவதோடு, மாணவருக்கு, மாதம் 20 நாட்கள் முட்டையும் வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாதவருக்கு வாழைப்பழம் வழங்கப்படும். அதேபோல், மாலைநேர சிற்றுண்டியாக வேக வைத்த பயறு வகைகள், சுக்குமல்லி அல்லது கருப்பட்டி காபி வழங்கப்படுகிறது. இதுவரை, சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இத்துடன், சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை, பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்கப்படும். பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை….