வேலூர், செப்.26: வேலூரில ₹30 லட்சம் கேட்டு மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரபல ரவுடி வசூர் ராஜா உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி சுதந்திர பொன்விழாநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(43). இவர் பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு தங்கராஜன் வீட்டின் அருகே மலையடிவாரத்தில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார். அதில், ரவுடி வசூர்ராஜா கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலர் தங்கராஜிடம் ₹30 லட்சம் கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும், அதனால் அவர் பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
அதையடுத்து தங்கராஜை தற்கொலைக்கு தூண்டியதாக வசூர்ராஜா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து புதுவசூரை சேர்ந்த விக்ரம்(32), அலுமேலுரங்காபுரம் அருண்குமார்(22), கருகம்பத்தூர் நரேஷ்(35), கொணவட்டம் முகமது இம்தியாஸ்(32), சத்துவாச்சாரி திலீப்(34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பெங்களூருவில் பவுன்சராக பணிபுரிந்த ரங்காபுரத்தை சேர்ந்த யோகேஷை(29) போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் நேற்று வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் வைத்து யோகேஷை கைது செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான வசூர்ராஜா வேலூர் கோர்ட்டில் தொடர்ந்து நடக்கும் குற்றவழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு தற்காலிகமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தங்கராஜ் தற்கொலை வழக்கில் கைது செய்து அதற்கான ஆணையை வசூர்ராஜாவிடம் போலீசார் நேற்று சிறையில் வழங்கினர். அவர் இன்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.