பெரம்பூர்: வியாசர்பாடியில் பிரபல தனியார் ரெஸ்டாரண்டில் சிக்கன் சாப்பிட்ட வாலிபர் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (22). பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று மாலை தனது நண்பர்கள் கிரிதரன், சூரியா, விக்னேஷ் ஆகியோருடன் பிரபல தனியார் ரெஸ்டாரண்டில் ஆர்டர் செய்து சிக்கன் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடிந்ததும் ரஞ்சித் குளிர்பானம் அருந்தியுள்ளார். அதன்பிறகு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். வீட்டுக்கு செல்லும் வழியில் ரஞ்சித்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு இடது பக்க கை வலிப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். வீட்டிற்கு சென்றதும் இரவு 10 மணியளவில் இடது பக்கம் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித்தின் அண்ணன் விக்னேஷ் உடனடியாக ரஞ்சித்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே ரஞ்சித் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ரஞ்சித்தின் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். பிரேதபரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் ரஞ்சித் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல தனியார் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….