திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேதியப்பன். தொழிலாளி. இவரது 3 வயது மகள் உதய ஸ்ரீ. கடந்த 8-ம் தேதி உதய ஸ்ரீயை இடது ஆள் கட்டி விரலில் விஷப்பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் நாடி துடிப்பு மற்றும் சுவாசம் குறைந்து உயிருக்கு போராடும் நிலையில், உதய ஸ்ரீயை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசம் பொருத்தி, உடனடியாக பாம்பு விஷ முறிவு மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் செலுத்தி உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் நல்ல உடல் நிலை தேறி உணவு அருந்தும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்களிடம் வீட்டிற்கு மகிழ்ச்சியாக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.