பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனரும், தமிழக மூத்த அரசியல் தலைவருமான ராமதாஸ் நேற்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 84வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு பாமகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி இல்லத்தில், அவரது பேரன்கள் மிளிர், அகிரா ஆகியோர் மரக்கன்று நட்டனர். இதே போல் ராமதாசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாமக நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாசுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்.எடப்பாடி கே.பழனிசாமி(அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்): பாமக  நிறுவனர் தலைவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ராமதாசுக்கு எனது இனிய  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும்  வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஓ.பன்னீர் செல்வம்(அதிமுக ஒருங்கிணைப்பாளர்): பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மன மகிழ்வுடனும், நல் ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள்.அண்ணாமலை(பாஜ  தலைவர்): பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம்  கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ராமதாசின் 84வது பிறந்த தினமான  இன்று, அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர பாஜ சார்பாக  வாழ்த்துகிறேன்.சீமான்(நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்): ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருபவர், சமரசமின்றி சமூகநீதி கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் போராளி. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இதே போல பாமக நிறுவனர் ராமதாசுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்